சேலம், நவ.7: சேலம் வின்சென்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில், கல்லூரி பேராசிரியர் விஜயகுமார் வரவேற்றார். முதல்வர் செண்பகலட்சுமி தலைமை வகித்தார். கணிதவியல் துறைத்தலைவர் சிவராம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரேமலதா, புவியமைப்பியல் துறைத்தலைவர் ஜெயபாலன், கூட்டுறவு பேராசிரியர் பிச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு பணியில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், ₹2000 வெகுமதி வழங்கும் நடைமுறை உள்ளது. அதன்படி, சேலம் அரசு கலைக்கல்லூரியில் கல்வி பணியில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 15 இணை பேராசிரியர்கள், 1 அலுவலக கண்காணிப்பாளர், பெரியார் பல்கலையில் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது பெற்ற பேராசிரியர்களுக்கு சால்வை அணிவித்து, சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.