Thursday, September 19, 2024
Home » ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்கள் நியமனம்: விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி மாநாட்டில் 7 தீர்மானம் நிறைவேற்றம்

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்கள் நியமனம்: விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி மாநாட்டில் 7 தீர்மானம் நிறைவேற்றம்

by Francis

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் உலக இளைஞர் தின மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாநில இளைஞரணி செயலாளர் எம்.சமய செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.பிச்சைப்பாண்டி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் இளைஞரணி பொருளாளர் அ.குருஸ்முத்துபிர்ன்ஸ், துணைத் தலைவர் பி.விஜயராகவன், அமைப்புசாரா மாவட்ட செயலாளர் எம்.வீரகுமார், விவசாயிகள்-தொழிலாளர் கட்சிச் செயலாளர் ஆர்.ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரிக் மாநில துணைத் தலைவர் எஸ்.பாலன் மாநாட்டை திறந்து வைத்தார். இளைஞரணி தலைவர் வினோத் பொன்குமார் மாநாட்டு கொடியேற்றினார். தலைவர் பொன்குமார், அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி பொதுச்செயலாளர்கள் என்.சுந்தராஜ், பொறியாளர் எஸ்.ஜெகதீசன், ஜெகன்முருகன், துணைத்தலைவர் பி.கே.மூர்த்தி, என்.லட்சுமணன், தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கவிஞர் குருநாகலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில், தமிழக இளைஞர்களுக்கு இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குதல் உள்பட பல்வேறு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் முதல்வருக்கு பாராட்டுக்கள். மதுரையில் அதிநவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்து கொடுத்த முதல்வரை பாராட்டுகிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களில் அலுவலர்களுக்கான பணி நியமனங்களில் தமிழக இளைஞர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்து வரும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்த 2014ல் ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்ற உத்தரவாதத்துடன் ஆட்சியமைத்த பிரதமர் மோடி, இன்றுவரை அந்த உத்தரவாதத்தை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ளாத பிரதமர் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மேலும், 100% வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், மாறிவரும் அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்து இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடத்த வேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

You may also like

Leave a Comment

nineteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi