சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று காலை நீர்வளம், இயற்கை வளம் மற்றும் தொழில் நலன், திறன் மேம்பாடு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் விளவங்கோடு தொகுதி உறுப்பினர் தாரகை கத்பட் (காங்கிரஸ்) பேசியதாவது: விளாத்துறை ஊராட்சி, தாளவிளை பகுதியில் பயன்பாட்டில் இல்லாத தொழிற்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.
களியக்காவிளை பழைய பேருந்து நிலைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. உடனடியாக நிதி ஒதுக்க கேட்டுக் கொள்கிறேன். போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த அகவிலைப்படி 2015 நவம்பர் மாதத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக வழங்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.