Monday, July 1, 2024
Home » ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம்!

ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

ருத்ராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போல சிவத்தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது. இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர். ருத்ராட்சத்தை தரிசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறு கோடி மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. நெல்லிக்காய் அளவுள்ள ருத்ராட்சம் உத்தமம்.

இலந்தைப்பழ அளவு மத்யமம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத ருத்ராட்சங்கள். ஒரே அளவுள்ளதும், உறுதியானதும், சம முத்துகள் போன்றதுமான ருத்ராட்சங்களை பட்டுக் கயிற்றில் கோர்த்து உடலில் அணிய வேண்டும். இனி ருத்ராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம்.

இருமுக ருத்ராட்சம் பரத்துவ சொரூபம். இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம். இருமுக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரன் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும். மும்முக ருத்ராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவருக்கு இன்பமூட்டும். நான்கு முக ருத்ராட்சம் பிரம்மனின் சொரூபம். ஐந்து முக ருத்ராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.

ஆறுமுக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும் கிட்டும். ஆறுமுக ருத்ராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள். ஏழு முக ருத்ராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும். எட்டு முக ருத்ராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்ரீத்தி அடையும். ஒன்பது முக ருத்ராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும்.

பத்துமுக ருத்ராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் முக்தி ஏற்படும். பதினொரு முக ருத்ராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது. பன்னிரெண்டு முக ருத்ராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது. பதிமூன்று ருத்ராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக ருத்ராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

108 ருத்ராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான். ருத்ராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின் போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. ருத்ராட்ச மாலையைக் கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம்.

தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சங்களை அன்போடு பூசித்து அணிகின்ற மானிடர்கள் எல்லோரையும் விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார். தீட்சைப் பெற்ற பெண்களும் ருத்ராட்சத்தை அணியலாம். ருத்ராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். பிறப்பு, இறப்பு, தீட்டுக்காலங்களில் ருத்ராட்சம் அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும், புனிதம் மிக்க ருத்ராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.

தொகுப்பு: பிரியா மோகன்

You may also like

Leave a Comment

19 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi