டெல்லி: நாட்டின் மிக உயர்ந்த ஒரு அவையில் பாஜகவின் குரல் எவ்வளவு அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பாருங்கள் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூரின் சர்ச்சை பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் வாதம் நடைபெற்றது. அப்போது ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் பேசிய ஒரு வார்த்தை சலசலப்பை ஏற்படுத்தியது. அனுராக் தாகூர் பேசும் போது, “சாதி பற்றி தெரியாதவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்கள்” என்றார். அனுராக் தாகூர் யாருடையை பெயரையும் குறிப்பிடாமல் இந்த கருத்தை சொன்னாலும் ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதமாகவே இந்த கருத்து பார்க்கப்பட்டது.
இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே தீருவோம் என்று உறுதியாக கூறினார். அனுராக் தாக்கூர் என்னை துஷ்பிரயோகம் செய்து இழிவுபடுத்தியுள்ளார். அவர்கள் தொடர்ந்து இழிவுபடுத்தட்டும். நான் குரல் கொடுத்து கொண்டுதான் இருப்பேன் என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
நேற்று நாடாளுமன்றத்தில்
“தன் சாதி தெரியாதவர் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா?” என்று ராகுல் காந்தி குறித்து அனுராக் தாக்கூர் பேசினார்.
அந்த பேச்சை அனைவரும் கேட்க வேண்டிய சிறந்த பேச்சு என்று பிரதமர் தனது X தளத்தில் பதிவிட்டார்.
நாட்டின் மிக உயர்ந்த ஒரு அவையில்
பாஜகவின் குரல் எவ்வளவு அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பாருங்கள். என்று அவர் பதிவிட்டுள்ளார்.