பாஜ பிரமுகர் வீரசக்தி உள்ளிட்ட நியோமேக்ஸ் இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மதுரை: நியோமேக்ஸ் மோசடி வழக்கில் பாஜ பிரமுகர் வீரசக்தி உள்ளிட்ட இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியாகின. மதுரை, எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகரான வீரசக்தி உள்ளிட்டோர் செயல்பட்டனர். முதலீடு செய்தால், இரட்டிப்பாக பணம் தரப்படும் எனக் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இதை நம்பி ஏராளமானோர் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கு அதிகமாகவும் முதலீடு செய்துள்ளனர். யாருக்கும் வட்டி தராமல் ரூ.5 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ நிர்வாகி வீரசக்தி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பாஜ பிரமுகர் வீரசக்தி உள்ளிட்ட இயக்குநர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் மீண்டும் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ரவி ஆஜராகி, ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இந்த மனுக்களின் மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.இளங்ேகாவன், அரசு தரப்பு வாதத்தை ஏற்று அனைத்து முன்ஜாமீன் மனுக்களையும் 2வது முறையாக தள்ளுபடி செய்தார்.

Related posts

பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!

நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!