சென்னை: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெரும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கடந்த 18, 19ம் தேதிகளில் இந்த 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் இணைப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், ‘‘5 மாவட்டங்களில் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தி முடிக்கப்படும். ஏற்கனவே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தேர்வுகள் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது தென் மாவட்டங்களிலும் மழையால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில் ஏற்படும் காலதாமதத்தை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்’’ என்றார்.