தேனாம்பேட்டையிலிருந்து – சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை தேனாம்பேட்டை பகுதிகளை பாண்டிபஜார் அண்ணாசலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர் பகுதிகளை இணைக்கும் தியாகராயா சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணாசலையுடன் இணைக்கும் எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, சென்னை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் சந்திப்பு, தி.நகர் பேருந்து நிலையம், உஸ்மான் சாலையை இணைக்கும் சிஐடி நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையில் உள்ள தாண்டோர் நகர் – ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிய 7 முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ நீளத்திற்கு 14 மீ அகலம் கொண்ட நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணி (பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம்) ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது. மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்மட்ட சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடத்திலேயே கடந்து செல்லலாம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் கணபதி, துணை மேயர் மகேஷ் குமார், துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தலைமை பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.