சென்னை: அண்ணாநகர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, மனைகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகைகளை செலுத்தி, வாரிய விதிமுறைகளின்படி கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ளலாம், என சென்னை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அண்ணாநகர் கோட்டத்திற்கு உட்பட்ட அண்ணாநகர், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், வில்லிவாக்கம், மணலி பகுதி I (ம) II, கொடுங்கையூர், கொரட்டூர், எம்.கே.பி.நகர், மாதவரம் மற்றும் ஆகிய திட்டப் பகுதிகளில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் வாரிய ஒதுக்கீடு விதிகளின்படி பணம் திருப்பி செலுத்தும் காலம் முடிவுற்றும், தமிழ்நாடு அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும், நீண்ட காலமாக பலர் நிலுவை தொகையை செலுத்த முன்வரவில்லை.
ஆகையால் ஒதுக்கீடுதாரர்கள் இந்த அறிவிப்பை கண்டவுடன் தங்களிடம் உள்ள ஒதுக்கீடு ஆணை, தொகை செலுத்தியதற்கான ரசீதுகள் மற்றும் ஒதுக்கீடு தொடர்புடைய அசல் ஆவணங்களுடன் அண்ணாநகர் கோட்ட அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு, கணக்கினை நேர் செய்து, நிலுவைத் தொகைகளை செலுத்தி, வாரிய விதிமுறைகளின்படி கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் நிலுவை வைத்துள்ள அனைத்து ஒதுக்கீடுதாரர்களின் ஒதுக்கீடு உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மறு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.