மேட்டுப்பாளையம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை நேற்று முன்தினம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 3 முறை ரத்து செய்யப்பட்டு 4வது முறையாக நடந்தது. சிறிது தூரம் மட்டுமே பாதயாத்திரையாக வந்த அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் எல்.முருகன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெரும்பகுதி ரத (வாகன) யாத்திரையாக சென்றனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பாதயாத்திரை என்ற பெயரில் வாகன யாத்திரை நடக்கிறது என கிண்டலடித்தனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே தற்காலிக மேடையில் தலைவர்கள் பேசினர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்களின் செல்போன்கள், பணம், பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டன.
ஒரு நபரிடம் ரூ.30 ஆயிரமும், இன்னும் சிலரிடம் சிறிய அளவிலான பணமும் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டம் கலைந்தவுடன் பலர், ‘‘பர்சை காணவில்லை, செல்போனை காணவில்லை, பணத்தை காணவில்லை’’ என லபோ திபோவென அலைந்ததை பார்க்க முடிந்தது. 10க்கும் மேற்பட்டவர்களிடம் கைவரிசை காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.