நாகர்கோவில்: தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை இன்று முதல் வரும் 18ம் தேதி வரை குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாத யாத்திரை மேற்கொள்கிறார். அவர் இன்று காலை கன்னியாகுமரியில் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து களியக்காவிளை பஸ் நிலையம் வந்தார். காலை 10.30 மணி அளவில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான பிரசாரத்தை களியக்காவிளை பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கினார்.
முன்னதாக இந்த பாதயாத்திரை பிரச்சாரத்தில் திடீரென மோடியின் பொம்மையுடன் வாகனம் முன் சென்றது. இதற்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது. டி.எஸ்.பி.க்கள் தங்கராமன், உதயசூரியன் ஆகியோர் பிரசார பயணத்தில் பிரதமரின் பொம்மையுடன் வாகனம் செல்ல அனுமதி வாங்கவில்லை. எனவே வாகனம் செல்லக்கூடாது என்றனர். இதையடுத்து அங்கு திரண்ட பாரதிய ஜனதாவினர் காவல் துறையினரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.