தனிநபர் விமர்சனத்திற்கு அண்ணாமலை தயாரா? நாங்க பேச ஆரம்பிச்சா கூவம் போல நாறி விடும்: சவுண்டு விடும் ஆர்.பி.உதயகுமார்

வாடிப்பட்டி: ‘மாநில தலைவர் பதவியை தக்க வைக்க போராடும் அண்ணாமலை தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும். நாங்கள் பேச ஆரம்பித்தால் கூவம் போல நாறிவிடும்’ என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.  மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சத்தமாக பேசுவதால், அவர் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது.

இதுவரை தமிழ்நாட்டிற்கு அவர் என்ன செய்துள்ளார்? தேர்தலின் போது எட்டு முறை பிரதமரை பிரசாரத்திற்கு அழைத்து வந்த அண்ணாமலை, தமிழ்நாடு வெள்ள பேரிடரில் சிக்கியபோது பிரதமரை ஏன் அழைத்து வரவில்லை. வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட, அங்கு புதிதாக பதவி ஏற்ற இணை அமைச்சர் சுரேஷ்கோபி பிரதமரை அழைத்துச் சென்றார். ஆனால், இதுவரை தமிழக மக்களுக்காக எப்போதாவது பிரதமரை அண்ணாமலை அழைத்து வந்துள்ளாரா?.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு கேள்வி எழுப்பினாரா? மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்பினாரா?. ரயில்வே திட்டங்களில் நிதி ரத்தானதற்கு கேள்வி எழுப்பினாரா?. நீங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் என்று, மூச்சு விடாமல் பேசினால் அதெல்லாம் உண்மையாகிவிடாது. நீங்கள் பாஜ மாநில தலைவராக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நியமனப் பதவியை வைத்துக் கொண்டு, அதனை தக்கவைக்க எல்லா தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது எந்த முறையில் நியாயம்?.

நீங்கள் தலைவராக இருக்கும் மூன்றாண்டுகளில் எத்தனை தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள்? அண்ணாமலை முதலில் நாவடக்கத்தை, பணிவை கற்றுக்கொள்ள வேண்டும். மாநில தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி, எத்தனை தொழிற்சாலை கொண்டு வந்திருக்கிறேன் என்று அவரால் கூற முடியுமா? உங்களுடைய நேரம், உழைப்பு, அறிவாற்றல், செல்வாக்கு, தொலைநோக்கு சிந்தனையை தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்திற்காக செலவழிக்க வேண்டும். அதைவிடுத்து அவரை அழிப்பேன், இவரை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு நீங்கள் என்ன எமதர்மராஜாவா? தனிநபர் விமர்சனத்திற்கு அண்ணாமலை தயார் என்றால், நாங்களும் தயார். நாங்கள் மதுரை தமிழில் பேச ஆரம்பித்தால், இப்போதைய கூவம் போல் நாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

* அண்ணாமலை தலை வெட்டிய ஆடு போல மாட்டிக் கொண்டார்: போட்டு தாக்கும் செல்லூர் ராஜூ

மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாமலையை பற்றி நான் பேசவா..? நான் பேசினா தப்பா போடுவீங்க.? பாக்ஸ் போட்டு மீம்ஸ் போடுவீங்க. அண்ணாமலை படத்தை வைத்து ஆட்டின் தலையை வெட்டினார்கள். திராவிட தலைவர்களை எல்லாம் அவதூறாக பேசியவர் அண்ணாமலை. இதற்கு முன்பு மோடி தமிழகத்திற்கு வாக்கு கேட்டு வந்தபோது ஜெயலலிதாவை புகழ்ந்தார்.

திராவிட ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்றதாக பேசிய அண்ணாமலை, இன்றைக்கு ஆடு தலை வெட்டியது போல மாட்டிக் கொண்டார். திராவிட கட்சிகளை விமர்சனம் செய்து பேசிய அவர் தற்போது புகழ்ந்து பேசி மாட்டிக் கொண்டார். இன்றைக்கு பாஜ மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது அவர்களால் எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியாது. அனைத்து கட்சியும் எதிர்க்கிறது. அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஒரு அரைவேக்கட்டுத்தனமான அரசியல்வாதி. பாஜவை பொருத்தவரை அகில இந்திய தலைமை தான். நாளைக்கே அண்ணாமலையை தேசிய தலைமை, அவரது மாநில பொறுப்பில் இருந்து இறக்கி விடலாம். இவரென்ன சுஜூபி? இந்த அண்ணாமலை சொல்லித்தான் கூட்டணி வைப்பார்களா என்ன?. இவ்வாறு கூறினார். அப்போது நிருபர்கள், ‘‘ஓபிஎஸ் முக்கிய நிர்வாகிகளுடன் அடுத்தடுத்து பேசி வருகிறாராமே? அதிமுகவில் அவரைச் சேர்க்கப் போறீர்களா?’’ என்றனர். அதற்கு அவர், ’’அது தெரியலை. நீங்கள்லாம் சொல்லித்தாம்பா தெரியுது… என்னான்னு தெரியலை?’’ என்றார்.

Related posts

பெருங்குடி மண்டல குழு கூட்டம்; வாட்ஸ்அப் குழு உருவாக்கி பணிகளை முடிக்கவேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேச்சு

ஜம்மு-காஷ்மீர், அரியானா தேர்தல் நேரத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு: பட்ஜெட்டில் அறிவிக்காத நிலையில் திடீர் ஒப்புதல்

நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஹேமா கமிட்டி முழு அறிக்கை விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பு: முக்கிய நடிகர்கள் மீது நடவடிக்கை பாயுமா?