Sunday, June 30, 2024
Home » அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்களைத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலையில் வெளியீடு கூட்டம்

அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்களைத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலையில் வெளியீடு கூட்டம்

by Arun Kumar


சென்னை: அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆக்கங்களைத் தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் எளிய தமிழில் மொழிபெயர்த்து மலிவு விலையில் வெளியிடல் தொடர்பான குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் மக்கள் களத்திலும், அறிவுசார் துறைகளிலும் அரசு சார்ந்த அமைப்புக்களின் மூலமாகவும், மக்களாட்சியைக் காக்க இருபதாம் நூற்றாண்டில் இடையறாத போராட்டம் நிகழ்த்திய அறிவாளுமை அண்ணல் அம்பேத்கர், சமூகத்தைப் பீடித்துள்ள முடைநாற்றம் என அறியப்பட்ட சாதீயக் கட்டமைப்புக்கும், தீண்டாமை என்னும் பஞ்ச மாபாதகச் செயலுக்கும் எதிராகச் சமரசமற்ற தாக்குதல் தொடுத்து, அவை பற்றிய தமது ஆழமான, கூர்மையான, தெளிந்த ஆய்வுகளையும் முடிபுகளையும் அறிவாக்கங்களாகப் படைத்தார். சாதி என்னும் முடைநாற்றம் நீக்க வந்த கற்பூரப் பெட்டகமாகத் திகழ்பவை அண்ணலின் படைப்பாக்கங்களாகும்.

சிக்கலைக் களையாமல், சிக்கலை அதன் வேரோடும், வேரடி மண்ணோடும் களையும் உத்திகளைத் தம் படைப்புக்களில் வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர், இந்தியா சமூக விடுதலையை அடைவதற்கானப் பாதையாக அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவதில் பெரும் பங்காற்றினார். அரசு என்ற கட்டமைப்பின் துணை கொண்டே, தீண்டத்தகாதவர் எனச் சிலரால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், பெண்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் உரிமைகளுக்காகவும், தன்மானத்திற்காகவும் தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தி அல்லும் பகலும் அயராது உழைத்த பல்துறை வல்லுநரான அண்ணல் அம்பேத்கர் இந்திய ரூபாய், வங்கித்துறை வரலாறு முதலான இந்தியப் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்தும், மாநில உரிமைகள் குறித்தும், பாகிஸ்தான் பிரிவினை போன்ற சிக்கல்கள் குறித்தும் தம் படைப்பாக்கங்களில் அறிவார்ந்த கருத்தாக்கங்களை முன்வைத்துள்ளார்.

அண்ணலின் படைப்பாக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும், மராத்தி மொழியிலும் எழுதப்பட்டவை. அவற்றுள் பல அவர் வாழும் காலத்திலேயே வெளிவந்தவை. சில அவரது கையெழுத்துப் படிகளில் இருந்து பின்னர் வெளியிடப்பட்டவை. இன்னும் சில, மும்பை சட்டமன்றத்திலும், ஆங்கில ஆட்சியாளர் அவையிலும், அரசியல் நிர்ணய அவையிலும், இந்திய நாடாளுமன்றத்திலும் அண்ணலின் உரைகளாகவும், வினாக்களுக்கு அவர் ஈந்த விடைகளாகவும் அரசுப் பதிவேடுகளிலேயே புதைந்து கிடந்தன. இவற்றோடு அவர் எழுதி வெளிவந்த பத்திரிக்கைக் கட்டுரைகளையும் மொத்தமாகத் திரட்டித் தொகுத்து 1979இல் மராட்டிய மாநில அரசு ஆங்கிலத்தில் 37 தொகுதிகளாக வெளியிட்டது.

இந்த 37 தொகுதிகளையும் தமிழ்நாட்டின் நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் தமிழாக்கம் செய்து அதே போன்றே 37 தொகுதிகளாக வெளியிடப்பட்டாலும் அந்நூல்கள் முழுமையான மொழிபெயர்ப்பாக அமையவில்லை என்பதைக் கருத்திற்கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு, அண்ணல் அம்பேத்கரின் அனைத்துப் படைப்பாக்கங்களையும் இக்காலச் சூழலுக்கு ஏற்ப பொருள்வாரியான தலைப்பில் எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பிறமொழிக்கலப்பின்றி உலக மக்களை சென்றடையும் வகையில் வெளியிட அறிவுறுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணலின் ஆக்கங்களுக்கு முன்னர் வெளிவந்த தமிழ்ப் பதிப்பில் இடம்பெற்றுள்ள மணிப்பிரவாள மொழிநடையை இக்காலத் தமிழுக்கு ஏற்ற செழுந்தமிழாக மாற்றியும், அண்ணலின் படைப்புக்களைப் பொருளடைவு மற்றும் கால முறையில் புதிதாக வகை தொகை செய்தும், ‘அண்ணல் அம்பேத்கரின் அறிவுக் கருவூலங்கள்’ எனும் புதிய தலைப்பில் 60 தொகுதிகளாக தமிழ் வளர்ச்சித் துறையோடு நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வெளியிட முனைந்துள்ளன.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நூல்களை எளிய தமிழில் வெளியிடும் திட்டத்தினைச் செயற்படுத்திட சூலுர் பாவேந்தர் பேரவைத் தலைவர் புலவர் செந்தலை
ந. கவுதமன், எழுத்தாளர், ஆய்வாளர் பேராசிரியர் வீ. அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் மு. வளர்மதி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் மேனாள் துணை இயக்குநர் அ. மதிவாணன், சண்முகம் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதல் கூட்டம் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் அவர்களின் தலைமையில் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் 09.02.2024ஆம் நாளன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கர் கருத்துகளின் பொருள் மாறுபாடு தவிர்த்தல்; எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் மொழிநடையில் தகுதி வாய்ந்த மாற்றங்களைச் செய்தல்; இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்ப மொழிவளத்தை அமைத்தல்; பிறமொழிக் கலப்பினை அகற்றுதல்; உலக மக்களிடம் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றைத் திட்டமிட்டுச் செயலாற்றவும், தொகுதிகளில் இடம்பெறும் அருங்கலைச் சொற்கள் மற்றும் அக்கால வழக்குச் சொற்கள் ஆகியவற்றை அத்தொகுதியின் இறுதியில் சேர்க்கப்பெறலாம் எனவும் அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களில் இதுவரை அச்சில் வெளிவராத, நூல் வடிவில் கிடைக்கப்பெறாத பிற அரிய செய்திகளையும் கண்டறிந்து, அவற்றையும் தொகுத்து, புதிய தொகுதிகளாக வெளியிடவும், அறிவுச்சுடர் அம்பேத்கரின் ஒளிப்படங்களை பல்வேறு பருவங்களின் அடிப்படையில் அமைத்து அத்தொகுதிகளில் வெளிவரவும், ஒவ்வொரு தொகுதியும் 300 பக்கங்கள் வரை கொண்டதாக அமையப்பெறும் வகையிலும், அடக்க விலையை விடக் குறைவான விலையாகத் தொகுதி ஒன்றுக்கு ரூபாய் 100/-க்கு மிகாமல் விற்பனை செய்யலாம் எனவும் குழுவால் முடிவு செய்யப்பட்டது.

You may also like

Leave a Comment

13 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi