116வது பிறந்தநாளை ஒட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: அண்ணா பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் 116வது பிறந்த நாளை ஒட்டி நேற்று காலை சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, தாயகம் கவி, எழிலன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம், அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதன்பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்ததுடன் உருவப் படத்துக்கும் மலர் தூவி வணங்கினார். இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, எம்.கே.மோகன், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு உள்ள அண்ணாசிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்று அண்ணா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

* உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: 75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா. தலைவர் கலைஞர் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார், எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன். ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்