நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?

கழுகுமுட்டை ஒன்றைக் கோழி முட்டைகளுடன் ஒருவன் கலந்து வைத்து விட்டான். கோழி முட்டைகள் பொரித்து வெளியே வந்தபோது கழுகு குஞ்சும் வெளியே வந்தது. கழுகுக் குஞ்சும் கோழிகுஞ்சுகளுடன் சேர்ந்து இணைந்து வளர்ந்தது. கோழி குஞ்சுகளுடனேயே தானியங்களையும் புழுக்களையும் தின்று வளர்ந்தது. ஒருமுறை கோழிக் குஞ்சுகளை கண்டு வட்டமிட்ட கழுகு ஒன்று, கோழிகளுக்கிடையே இருந்த கழுகு குஞ்சை பார்த்து விட்டது. தன் இனத்தைச் சேர்ந்த கழுகு தான் யார் என்பதை அறியாமல் கோழிகுஞ்சுகளுடன் உலாவருவதை பார்த்து ஆச்சரியப்பட்டது.நேரே பறந்து வந்து, கழுகு குஞ்சினை பார்த்து கழுகு சொன்னது, ‘‘ஏய் நீ நம் இனம், வானத்தில் அரசனைப்போல உலா வருகிறவன், ஏன் இந்த குப்பை மேட்டை கிளறிக் கொண்டிருக்கிறாய், நீ என்னோடு வந்துவிடு உன்னை வானத்தில் பறக்க வைக்கிறேன்’’ என அழைத்தது. அதற்கு கழுகு குஞ்சு, ‘‘நான் ஒரு கோழிக் குஞ்சு, நீ என்னை ஏமாற்றி சாப்பிட நினைக்கிறாய் உன் தந்திரப் பேச்சுக்களை நான் நம்ப மாட்டேன்’’ எனக்கூறி மற்ற குஞ்சுகளுடன் ஓடி ஒளிந்து கொண்டது.

இறைமக்களே, மேலானதை நோக்கங்களுக்காக தேவன் நம்மை படைத்திருக்க, நாமோ நாம் வளரும் சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு எனது உயரம் இவ்வளவுதான் என முடிவு செய்துவிடுகிறோம். நம்மை நாம் உணராத வரையிலும், நமது வலிமை நமக்குத் தெரியாத வரையிலும் நாம் யாரோ ஒருவரால் அடிமைப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. மேலும், கிறிஸ்துவுக்குள் நாம் யார்? என்பதை அறிந்திராவிட்டால் நாம் வெற்றி பெற்றுச் சிறக்க முடியாது. உலகம் நம்மைப்பற்றி என்ன சொல்கிறது என்பதல்ல, தேவன் நம்மைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதே (முக்கியம்) உண்மை. ‘‘பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்’’
(கொலோ 3:2).
– அருள்முனைவர்.
பெ. பெவிஸ்டன்.

Related posts

மகான்களுக்கு ஏன் துன்பம் வருகிறது?

முத்துசுவாமி தீட்சிதர் காட்டும் ஸ்ரீவித்யா ராஜகோபாலன்

திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை