அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் மிக முக்கிய தொழில் நகரமாகும். இங்கு பேருந்து நிலையம், காவல் நிலையம், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை உள்ளது. இதனால் இந்தப் பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தினமும் காலை மாலை வேலைகளில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் இந்த வழியாக வந்து செல்வார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் இதில் விழுந்து சிறு விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. மேலும் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மீது சேரும், சகதியும் படுவதால் அவர்கள் மிகவும் வேதனை அடைகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நலன் கருதி அஞ்சு கிராமம் சந்திப்பு சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், 9வது கவுன்சிலர் வீடியோ குமார் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.