ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா?

ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்திருக்கும் நபர் ஆஞ்சநேயர். உடல், அறிவு, வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒன்றாய் அமையப்பெற்றவர் ஆஞ்சநேயர். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை அஷ்டாம்ச ஆஞ்சநேயர் என்று அழைப்பதுண்டு. காரணம் அவர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அப்படி அழைக்கப்படுகிறார்.

* ஆஞ்சநேயரின் வலது கையானது தன்னை தேடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்’ என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது இதன் முதல் சிறப்பு.

* மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவை அனைத்தையும் அழிப்பது மட்டுமின்றி, வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஆயுதங்களில் கதாயுதம் தான் மிகவும் சிறந்தது. அனுமனின் இடது கையில் இருக்கும் கதாயுதம் வெற்றியை மட்டுமே தரக்கூடியது இதன் இரண்டாவது சிறப்பு.

* ஒரு மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை. ராமாயணத்தில் ஒருமுறை லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் இருக்க அவரைக் காப்பற்றுவதற்காக ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தத போது அதில் ஒரு பகுதி மட்டும் கீழே விழுந்தது. அப்படி கீழே விழுந்த மேற்கு தொடர்ச்சி மலையில் தான் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் இருக்கிறது. இந்த மலையை பார்த்தபடி தான் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நோய் நொடியற்ற வாழ்க்கை அமைய இவரை தரிசிக்கலாம். இவரின் மேற்கு நோக்கிய முகம் தான் மூன்றாவது சிறப்பு.

* தெற்கு திசை எமதர்மராஜனின் திசை என்று கூறுவார்கள். அதனால் அனுமனின் தெற்கு நோக்கிய கால்களை வணங்கி வழிபடுவதால் மரண பயம் நீங்கி ஆயுள் நீடிக்கிறது. இதுதான் நமக்கு நல்வாழ்வு தரக்கூடிய நான்காவது சிறப்பு. அடுத்து அனுமனின் மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கி இருக்கிறது. அதிலும் வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு, ஏனென்றால் வடக்கு திசையை குபேர திசை என்று கூறுவார்கள். இதனால் நமக்கு குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும்.

அதேபோன்று அனுமனை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற அச்சம் பொதுவாக அனைவருக்கும் உள்ளது. ஆனால் அந்த பயமே தேவையில்லை. “ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ என்று யார் தெரிவித்தாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், ” என்று ராமரிடம் சத்தியம் செய்து பின்னர் சனி பகவான் தன் இருப்பிடம் சென்று விட்டதாக கூறுவார்கள். இதுதான் ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

* ஆலவாயன் சிவனின் அம்சம் தான் ஆறாவது சிறப்பு. ராமாயணத்தில் கடவுளர்கள் மற்றும் தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதனடிப்படையில் ராமாயணத்தில் ஆலவாயனான சிவன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் அனுமனை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. இவரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஈடானது. இருவரும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

* ஏழாவது சிறப்பு ஏழுமலையானின் அனுக்கிரகம். எப்படி ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள் பாலிக்கிரார்றோ, அதேபோன்று தான் அனுமனின் வலது உள்ளங்கை மத்தியில் மகா லட்சுமி அமர்ந்திருக்கிறாள். அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் இதனால் கிடைக்கிறது. எரிகின்ற சூரியன் தான் எட்டாவது சிறப்பு.

* அனுமனின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி அளிக்கிறது. அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களை அவர்களின் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் புரிகிறார் என்பதை உணரலாம்.

Related posts

பாண்டுரங்கன் வருகை

வாஸ்து நாள் என்றால் என்ன?

திருவல்லிக்கேணியும் திருவீதிஉலாவும்