திருவனந்தபுரம்: நீட் போராட்டத்தில் அனிதா தியாகி என்று கேரளா காங்கிரஸ் கட்சி பரபரப்பு டிவிட் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் இதுதொடர்பாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நீட் ேபாராட்டத்தில் உயிரை மாய்த்த தமிழ்நாடு மாணவி அனிதா தியாகி என்று கேரளா காங்கிரஸ் டிவிட் வெளியிட்டுள்ளது. அந்த டிவிட்டில் கூறியிருப்பதாவது: 12ம் வகுப்பில் 1176/1200 (98%) பெற்ற தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற தலித் சிறுமியின் மதிப்பெண் இது. நீட் மதிப்பெண்ணை காரணம் காட்டி அவருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை.
அந்த போராட்டத்தில் அவர் உயிர் துறந்தார். ஆனால் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் இன்று, நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 705 மதிப்பெண் பெற்று இருப்பதை பார்க்கும்போது, இந்த முறை எவ்வளவு நியாயமற்றது, ஒருதலைப்பட்சமானது என்பதை நீங்கள் உணர முடியும். இந்த போராட்டத்தில் அனிதா தியாகி. இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அந்த டிவிட்டில் அனிதாவின் பிளஸ் 2 மார்க் அட்டை மற்றும் அவரது சட்டப்போராட்டம் ஆகியவை விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.