ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அதிவேகமாக சென்ற லாரி மோதியதில் 2 குட்டிகள் உட்பட 3 யானைகள் உயிரிழந்தன. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பலமனேர் அருகே ஜகமர்லா பகுதியில் 4 யானைகள் சாலையை கடக்க முயன்றன. அப்போது கர்நாடகாவில் இருந்து காய்கறி ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து யானைகள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட யானைகள் சாலை தடுப்பு கம்புகளில் மோதி உயிரிழந்தன. யானைகள் மீது மோதியதில் லாரியின் முன் பக்கமும் சேதம் அடைந்தது.
யானைகள் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், யானைகளின் உடல்களை மீட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று அங்கேயே பிரேத பரிசோதனை செய்து உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பலமனேர் காவல் நிலையத்திற்கு அவரே சென்று நேரடியாக சரண் அடைந்துள்ளதாகவும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.