ஆந்திரா: ஆந்திராவில் மண்ணுக்கு அடியில் கிடைத்த பீரோவில் புதையல் இருப்பதாக நினைத்து திறந்த போது ஒரு அனா நாணயமும், பழைய காகிதங்களும் இருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்னூல் மாவட்டம் தேவனம் கோண்டாவை அடுத்துள்ள கரிவேமுலா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பவர் தனது வீட்டை நரசிம்மலு என்பவருக்கு விற்பனை செய்தார். வீட்டை இடித்துவிட்டு புது வீடு கட்டுவதற்காக நரசிம்மலு கடைக்கால் தோண்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மண்ணுக்குள் இருந்த இரும்பு பீரோ கிடைத்துள்ளது.
அதிக எடையுடன் இருந்த பீரோவில் முன்புற கதவில் லட்சுமி படம் இருந்ததால் உள்ளே விலை மதிப்பு மிக்க நகைகள் இருக்கலாம் என்ற தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இதனை அடுத்து மக்கள் முன்னிலையில் பீரோ திறக்கப்பட்டது. புதையல் கிடைக்கும் என ஆவலுடன் பார்த்தவர்களுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான் பீரோவை திறப்பதற்கு முன் புதையல் தங்களுக்கே சொந்தம் என மூன்று தரப்பினரும் மாறி மாறி கூறிவந்த நிலையில் பீரோவுக்குள் இருந்த சில பழைய காகிதங்களும் செல்லாத ஒரு அனா நாணயத்தையும் என்ன செய்வது என தெரியாமல் அவர்கள் திகைத்தனர்.