திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யபப்ட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை எஸ்.பி. தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் புதிய பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் அரக்கோணம் நோக்கிச் சென்ற நபரை மடக்கி சோதனையிட்டனர். பைக்கில் வைத்திருந்த சாக்கு பைகளில் 40 கிலோ குட்கா, புகையிலை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் அரக்கோணம் அடுத்த வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த பாலு (44) என்பதும், ஆந்திர மாநிலம் புத்தூரில் குறைந்த விலைக்கு குட்கா, புகையிலை பொருட்களை வாங்கி வந்து அரக்கோணம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து பாலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.