ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு சறுக்குப்பாதை

ஸ்ரீ வில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மாற்றுத்திறனாளி பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சறுக்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மாற்றுத் திறனாளி பக்தர்கள் வந்து செல்ல கோயிலில் மூன்று சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் குறிப்பிட்ட சில இடங்களில் அதை பயன்படுத்தி கோயிலுக்குள் செல்வதில் சிரமம் உள்ளது. எனவே மாற்றுத்திறனாளி பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஆண்டாள் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுமார் ரூ.5.50 லட்சம் செலவில் சறுக்கு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கான பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டாள் கோயில் கொடிமரம் அருகே, நந்தவனம் மற்றும் பெரியாழ்வார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி உள்பட ஏழு இடங்களில் மாற்றத்திறனாளிகள் செல்லும் சறுக்கு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஆண்டாள் கோயிலைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறும்போது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாற்றுத்திறனாளி பக்தர்களும் இதற்கு முன்பு வந்ததை விட தற்போது அதிக அளவில் வருகின்றனர். எனவே அவர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் சிரமம் இன்றி கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய சறுக்கு பாதைகள் பல அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார். சறுக்கு பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related posts

சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு வாரம் இருமுறை விமான சேவை : முதல்வருக்கு பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி

சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்துக : தயாநிதி மாறன் எம்.பி

அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர் ரவி : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி