கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிப்காட் எதிரில் லாரி மீது அடுத்தடுத்து காரும் தனியார் டிராவல்ஸ் பேருந்தும் மோதி விபத்த்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவர் தனது மனைவி, மகள்கள் இருவருடன் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிப்காட் அருகே பாலம் வேலை நடந்து கொண்டிருந்ததால் முன்னாள் சென்ற லாரி மெதுவாக சென்று கொண்டிருந்தது.
அப்போது காரையும் அழகுராஜா மெதுவாக ஒட்டி சென்றுள்ளார். அப்போது ஆன்மிக சுற்றுலா முடித்து திருச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து கார் மீது பயங்கரமாக மோதியது கார் முன்னாள் சென்ற லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணித்த தாய் ஜெயா மற்றும் மகள் வசந்தி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். பேருந்தில் சென்ற 45-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.