Thursday, September 19, 2024
Home » எண்ணூரில் அமோனியா வாயு கசிவு எதிரொலி கடலில் செத்து மிதக்கும் மீன்கள்: 2வது நாளாக மீனவர்கள் போராட்டம்

எண்ணூரில் அமோனியா வாயு கசிவு எதிரொலி கடலில் செத்து மிதக்கும் மீன்கள்: 2வது நாளாக மீனவர்கள் போராட்டம்

by Ranjith

திருவொற்றியூர்: எண்ணூரில் அமோனியா வாயு கசிவு எதிரொலியால் பல இடங்களில் கடலில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 2வது நாளாக மீனவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தனியார் உர தொழிற்சாலையில், 2 நாட்களுக்கு முன், குழாய் உடைந்து அமோனியா வாயு கசிந்தது. இதனால் பெரியகுப்பம், சின்ன குப்பம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல பகுதிகளில் அமோனியா வாயு காற்றில் பரவியது.

இதன் விளைவாக மீனவர்களுக்கு மூச்சுத் திணறல், மயக்கம், இருமல், வாந்தி போன்ற பிரச்னை ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சென்னை ஸ்டான்லி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து போலீசார் மற்றும் மாசுக்கட்டுபாடு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதை தொடர்ந்து, வாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்த உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நிறுவன வாசலில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைடுத்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மாலை தொழிற்சாலைக்கு வந்து ஆய்வு நடத்தி, அடுத்த 7 நாட்களுக்கு நிறுவனம் செயல்பட கூடாது என்று தற்காலிக தடை விதித்து அதற்கான நோட்டீஸை நிறுவன நுழைவாயிலில் வருவாய்த்துறை மூலம் ஒட்டினர்.  இதனையடுத்து நிறுவன வாசலில் 8 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனிடையே அமோனியா வாயு கசிவு பீதியால் கிராமத்தை விட்டு வெளியேறிய மீனவர்களும், பொதுமக்களும் மீண்டும் படிப்படியாக தங்களது வீடுகளுக்கு வந்ததனர்.

ஆனாலும் பெரியகுப்பத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி 2வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அமோனியா வாயு கலந்ததால் கடலில் மீன்கள் செத்து மிதக்க ஆரம்பித்துள்ளன. நெட்டுக்குப்பம் அருகே கடற்கரையில் ஏராளமான மீன்கள் செத்து கரையில் ஒதுங்கியது. இதைப் பார்த்த மீனவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘கடலில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அமோனியா வாயு காற்றில் கலந்ததோடு, கடல் நீரிலும் கலந்துள்ளது.

இதனால் கடல் நீர் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த அமோனியா வாயு கலந்த கடல் நீர் பல இடங்களில் பரவி வருவதால் சிறிய வகை மீன்கள் மட்டுமின்றி கொடுவா, பாறை போன்ற பெரிய மீன்களும் செத்து மிதக்கின்றன. இது மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கடல்நீரில் கலந்துள்ள அமோனியா வாயு குறித்து ஆய்வு நடத்தி, பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செத்து மிதக்கும் மீன்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அப்புறப்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடல் சீற்றம் காரணமாக உர தொழிற்சாலையின் குழாயில் 5 எம்எம் அளவிற்கு உடைப்பு ஏற்பட்டதற்கே இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு பெரிய அளவில் இருந்திருந்தால் இதைவிட பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும். மேலும் கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள 15,000 டன் கொள்ளளவு கொண்ட தொட்டி பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கடல் சார் விதிமுறைகளின்படி இந்த தொட்டியை கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தள்ளி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிறுவனத்தின் சார்பில் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். மேலும் தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதால் நிறுவனத்தின் குழாயில் சுமார் 2 டன் அம்மோனியா வாயு பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கும். இவ்வாறு நாள் கணக்கில் கடலில் பதிக்கப்பட்டுள்ள குழாய், மற்றும் நிறுவனத்தின் உள்ளே உள்ள இயந்திரங்களில் அமோனியா வாயு தங்கி இருப்பது இதைவிட ஆபத்தானது என்று தொழில் வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே இது குறித்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

* பழைய முறையை மாற்ற வேண்டும்
தற்போது உடைப்பு ஏற்பட்ட இந்த குழாயை சரி செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் உடைப்பை சரி செய்தாலும் மீண்டும் இதுபோன்ற விபத்து ஏற்படாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. எனவே கப்பலிலிருந்து குழாய் வழியாக நிறுவனத்திற்கு அமோனியா வாயு பரிமாற்றம் செய்யும் பழைய முறையை மாற்றி, புதிய தொழில்நுட்பத்தில் பாதுகாப்பான முறையில் அமோனியாவை பரிமாற்றம் செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

seventeen − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi