பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் ஆந்திர பேருந்து நிலையம் அருகில் ஜனகராஜ் குப்பம் சாலையில் உள்ள கங்கை அம்மன் ஆலயத்தில், தினமும் கிராம மக்கள் அம்மனை தரிசித்து கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை பக்தர்கள் கோயிலுக்கு சென்றபோது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பம் தொடர்பாக உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆர்.கே.பேட்டை போலீசார் விரைந்து வந்து கோயில் உண்டியல் உடைப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.