சென்னை: சென்னை கே.கேநகர் மற்றும் அசோக் நகர் பகுதிகளில் உள்ள நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அம்மா உணவங்கள், பொது கழிப்பிடங்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை அகற்ற வேண்டும், என வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்த விதி மீறல் கட்டுமானங்கள் காரணமாக பள்ளி மாணவிகள், பாதசாரிகள் செல்ல இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் அளித்தும் எந்த நடவடிகையும் எடுக்கப்படவில்லை, என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்னை மிக முக்கியமானது என்பதால் இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.