ஓசூர்: ஓசூரில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு பெங்களூரு புகழேந்தி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் காலை சிற்றுண்டியை துவக்கி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று, அம்மா உணவகத்தின் மேம்பாட்டிற்காக ரூ.21 கோடியை ஒதுக்கியுள்ளார். இதனை பாராட்டுக்குரிய விஷயமாக பார்க்கிறோம். எங்களை பொருத்தவரை, நல்லவைகளை செய்யும்போது பாராட்டுகிறோம்.
அம்மா உணவகத்திற்கு, 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. ஆட்சியில் இருந்தார், போனார், உணவு பொருட்களில் ஊழல் செய்தார் என வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு மன்றத்தில் உள்ளது. இதுதான் அவரது சாதனை. பிரதமரின் நாற்காலி ஆட்டத்தில் உள்ளது. அது நிரந்தரமான நாற்காலியாக இல்லை. ஒன்றிய மத்திய அரசின் ஆட்சி நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் கையில் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும், அந்த நாற்காலியை அவர்கள் தள்ளி விடுவார்கள். இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.