சில நாட்களுக்கு முன் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் நேரடியாக விவாதம் நடத்தினர்.விவாதத்தில் குடியுரிமை, பொருளாதார நிலைமை உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர். இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாக பல செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அதிபர் தேர்தல் களம் மாறியுள்ளது. முதலில் டிரம்புக்கு அதிக ஆதரவு இருந்த நிலையில் தற்போது கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். வரும் 21 ம் தேதி முதல் 23ம் தேதி வரை 3 நாட்கள் அமெரிக்காவில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்நிலையில் தான் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை, நேரில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மிச்சிகன் நகரில் நடந்த பிரசாரத்தில் இதனை டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,‘‘இந்திய – அமெரிக்க வர்த்தக உறவை இந்தியா மிகப்பெரிய அளவில் துஷ்பிரயோகம் செய்கிறது. இருந்தாலும் இந்திய பிரதமர் மோடி அற்புதமானவர். அடுத்த வாரம் அமெரிக்கா வரும் அவரை நான் சந்திப்பேன்” என்றார்.