ஆம்பூர் அருகே அடுத்தடுத்து விபத்து; தடுப்பு சுவரில் கார் மோதி சென்னை பெண் பலி: பஸ் மீது வேன் மோதி 9 பேர் படுகாயம்


ஆம்பூர்: ஆம்பூர் அருகே வடபுதுபட்டு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். 9 பேர் காயமடைந்தனர். சென்னை வேளச்சேரி அருகே உள்ள புத்தரகரம் பகுதியை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன்(35). இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள பெருமாள் கோயிலில் அர்ச்சகராக பணி செய்து வருகிறார். இவர் சென்னையில் வசித்துவரும் தந்தை வெங்கட்ராமன், தாயார் திலகம் ஆகியோரை அழைத்துக்கொண்டு நள்ளிரவு ஏலகிரிக்கு காரில் புறப்பட்டார். காரை பிரகதீஸ்வரன் ஓட்டிச்சென்றார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுபட்டு அருகே இன்று அதிகாலை 4.20 மணியளவில் வந்தபோது கட்டுபாட்டை இழந்த கார், சாலையின் தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த திலகம்(62) அதேஇடத்தில் பரிதாபமாக இறந்தார், வெங்கட்ராமன் படுகாயமடைந்தார்.

இந்நிலையில் அவ்வழியாக சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு சென்ற ஆம்னிபஸ், கவிழ்ந்து கிடந்த கார் மீது மோதாமல் இருக்க சாலையோரமாக நின்றது. அப்போது சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்ற ஒரு வேன், ஆம்னிபஸ்சின் மீது ேமாதியது. இதில் வேன் நொறுங்கியது. அதில் பயணம் செய்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன், இவரது மனைவி ஷியாமளாதேவி(40), மகன்கள் ஆதித்(12), அனிருத்(16), உறவினர்களான அபர்ணா(28), சரண்யா(25), சந்தியா(24), வேன் டிரைவரான சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த டிரைவரான திருஞானசம்பந்தம்(41) உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம்அடைந்த வெங்கட்ராமன், உன்னிகிருஷ்ணன் உள்பட 10பேரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வெங்கட்ராமன், திருஞானசம்பந்தம் ஆகியோர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை..!!

வாடிக்கையாளர்களுக்கு சலுகை: டாடா எலக்ட்ரிக் கார்களின் விலை குறைப்பு

மணிப்பூரில் செப். 15 வரை இணையதள சேவை முடக்கம்!!