Tuesday, September 17, 2024
Home » பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும் திட்டம் தற்போது இல்லை: ஐகோர்ட்டில் காவல்துறை தரப்பு தகவல்

பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும் திட்டம் தற்போது இல்லை: ஐகோர்ட்டில் காவல்துறை தரப்பு தகவல்

by Karthik Yash

சென்னை: பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழ்நாடு மாநில பாஜ தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பொக்லைன் இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தாகவும் கூறி மாநில பாஜ திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை அக்டோபர் 21ம் தேதி கானத்தூர் போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் பதிவாகி இருந்த மேலும் இரண்டு வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு தடை விதிக்கக் கோரியும் அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், பொக்லைன் இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லை. தனது கணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் தனது கணவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு விடுவார் என்கிற அச்சத்தில் முன்கூட்டியே வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போதைய நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னதாகவே தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி நிரோஷாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

twelve − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi