புல்தானா: மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டம் மும்பை – நாக்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லட்சுமி நகர் மேம்பாலம் வழியாக அமர்நாத் யாத்திரை பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்து, யாத்ரீகர்கள் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த புல்தானா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு புல்தானா மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அமர்நாத் யாத்திரை பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் 40 யாத்ரீகர்கள் இருந்தனர். விபத்துக்குள்ளான மற்றொரு பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். இந்த விபத்தில் 2 பேருந்துகளிலும் இருந்த பயணிகள் 6 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்’ என்றனர்.