ஜம்மு: அமர்நாத் புனித யாத்திரையில் பங்கேற்பதற்காக நாடு முழுவதுமிருந்து சாதுக்கள் ஜம்முவுக்கு வர தொடங்கி உள்ளனர். தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பனி உறைந்து சிவலிங்க வடிவத்தில் காட்சி தரும். இயற்கையாக உருவாகும் இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 வரை 62 நாட்கள் நடைபெற்ற புனித யாத்திரையில் 4.5 லட்சம் யாத்ரீகர்கள் பனி சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவுகள் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் நாடு முழுவதுமிருந்து ஏராளமான சாதுக்கள் ஜம்முவில் குவிய தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு ஜம்முவின் பூரணி மண்டி பகுதியில் உள்ள ராம் மந்திர் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோயில் வளாகங்களில் விருந்து அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தங்கும் இடத்திலேயே அமர்நாத் யாத்திரைக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.