ஜம்மு: தெற்கு காஷ்மீர் இமயமலையில் 3,880 மீட்டர் உயரமுள்ள அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளது. நடைபயணத்தைத் தொடங்குவதற்கு முன், தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் பட்டியலையும், யாத்திரைக்கு நீங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பொருட்கள் பட்டியலையும் அமர்நாத் ஆலய வாரியம் வெளியிட்டுள்ளது. கனரக புல்லாவ், ப்ரைடு ரைஸ், பூரி, பாட்டூரா, பீட்சா, பர்கர், ஸ்டப்டு பராத்தா, தோசை, வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள், ஊறுகாய், சட்னி, வறுத்த பப்பாளி, சௌமைன் மற்ற வறுத்த மற்றும் துரித உணவுப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
அதே சமயம் சில அரிசி உணவுகளுடன் தானியங்கள், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளது. உணவு கட்டுப்பாட்டை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், யோகா, பிராணாயாமம் ஆகியவற்றை மேற்கொள்ளவும் மதுபானம், புகைபிடித்தலை தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளது.