சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை 3வது தெருவை சேர்ந்தவர் விஜய் ஏசுதாஸ். சினிமா பாடகர் ஏசுதாசின் மகன். பிரபல பாடகரான இவர், மாரி, தீபாவளி, பட்டாசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் ஏசுதாஸ் தனது மனைவி தர்ஷனாவுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல கடந்த 18ம் தேதி வீட்டில் உள்ள நகைகளை பார்க்கும் போது, அதில் 60 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் வெளியாட்கள் யாரும் வராத நிலையில், நகைகள் மட்டும் மாயமாகி உள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் 2ம் தேதி நகைகளை பார்த்த போது, அனைத்து நகைகளும் இருந்துள்ளது.
ஆனால் தற்போது அதில் 60 சவரன் நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விஜய் ஏசுதாஸ் மனைவி தர்ஷனா அபிராமபுரம் காவல்நிலையத்தில், வீட்டில் உள்ள பீரோவில் இருந்து 60 சவரன் நகைகள் மாயமாகி உள்ளது. எங்களுக்கு வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் சையது, பெருமாள் ஆகியோர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவர்களிடம் விசாரணை நடத்தி நகைகளை மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளாக போலீசார் தெரிவித்தனர்.
புகாரின்படி அபிராமபுரம் போலீசார் விஜய் ஏசுதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். ‘அப்போது மாயமான நகைகள் அனைத்தும் தர்ஷனாவுக்கு அவரது பெற்றோர் திருமணத்தின் போது போட்ட நகைகள் என்று தெரியவந்துள்ளது. அதேநேரம் நகைகள் வைக்கப்பட்ட லாக்கர் ‘ரகசிய குறியீடு’ பயன்படுத்தும் லாக்கர். ரகசிய குறியீடு மற்றும் ரகசிய எண்கள் இருந்தால் மட்டுமே லாக்கரை திறக்க முடியும். ரகசிய குறியீடுகள் பாடகர் விஜய் ஏசுதாஸ் மற்றும் அவரது மனைவி தர்ஷனாவுக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் அந்த ரகசிய குறியீடு தெரியாது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாடகர் விஜய் ஏசுதாஸ் தற்போது துபாயில் உள்ளார். அவருக்கு திருட்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஏசுதாஸ் சென்னை வந்த பிறகு தான் திருட்டுபோன நகைகள் குறித்து முழுமையான தகவல் தெரியவரும். மாயமானதாக கூறப்படும் நகைகளின் மதிப்பு ரூ.60 லட்சம் வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. இருந்தாலும், சந்தேகத்தின் படி, விஜய் ஏசுதாஸ் வீட்டில் பணியாற்றி வரும் மேனகா, சையது மற்றும் பெருமாளிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு நடந்ததை போல சினிமா பாடகர் வீட்டில் 60 சவரன் நகைகள் மாயமான சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.