கூட்டணிக்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் மோடி; அழைப்பை புறக்கணித்தார் எடப்பாடி: அண்ணாமலை டெல்லிக்கு அழைப்பு

சென்னை: பேசி மூலம் தொடர்பு கொண்ட மோடியின் அழைப்பை எடப்பாடி பழனிச்சாமி நேற்று புறக்கணித்தார். அதோடு புதிய அணி அமைப்பதில் தீவிரம் காட்டுவதோடு புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளார். இதனால் அண்ணாமலையை டெல்லி வரும்படி மேலிடம் அழைத்துள்ளதால் அவர் விரைந்துள்ளார். அதிமுக, பாஜக கூட்டணி உடைந்ததால், இருவரும் தனி அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் தென் மாநிலங்களில் பாஜக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் கர்நாடகா, தெலங்கானாவில் ஓரிரு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் தனது கவனத்தை பாஜக செலுத்தியது. இதற்காக தென் மாநிலங்களுக்கு கூட நிதி வழங்காமல், வட மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கினர். மேலும், பல கட்சிகளை உடைத்து புதிய கட்சிகளை உருவாக்கி, அவர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டனர். இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளை இழுத்து புதிய கூட்டணிக்கு முயன்றனர்.

ஆனால் அந்தக் கூட்டணிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால் பீகார், மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் பாஜக திணறி வருகிறது. அதேநேரத்தில் வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாஜகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இதனால் தமிழகத்தில் அதிமுக கூட்டணியை புதுப்பிக்க பாஜக மேலிடம் முடிவு செய்தது. இதற்காக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரைக் கூட கூட்டணியில் சேர்க்காமல் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் வைத்துள்ளனர். ஆனால் எவ்வளவுதான் அவமானப்படுத்தப்பட்டாலும் கூட்டணிக்காக அவர்கள் இருவரும் பாஜகவின் அலுவலக வாசலில் காத்திருக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் பாஜகவோ எடப்பாடியை சமாதானப்படுத்தும் பணியை மேற்கொண்டது. இந்தநிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் பிரதமர் மோடி நேற்று இரவு எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டார். டெல்லியில் இருந்து அழைப்பு என்பதால், பழனிச்சாமி லைனில் வர மறுத்து விட்டார். மோடியிடம் பேசவும் மறுத்து விட்டார். இதனால், மோடி தரப்பில் இருந்து அதிமுக மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான 2 பேரை தொடர்பு கொண்டு, இன்று மாலை 6 மணிக்குள் அதிமுக கூட்டணி குறித்த முடிவை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுவரைதான் காத்திருப்போரும்.

அண்ணாமலைதான் உங்களுக்கு பிரச்னை. இதனால் மோடியே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதால் கூட்டணிக்கு நாங்கள் வருகிறோம் என்று வெளிப்படையாக அறிவியுங்கள். உங்களுக்காக நான் எந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். இன்று மாலைக்குள் கூட்டணிக்கான சாதகமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மோடியின் இந்த தகவலை எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக மூத்த தலைவர்கள் 2 பேர் தெரிவித்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, இப்போதுதான் சிறுபான்மையினர் நம்மை நம்பத் தொடங்கியுள்ளனர். மேலும் தமிழகத்துக்காக பாஜக எதுவும் செய்யவில்லை. இப்போது பாஜகவுடன் சேர்ந்தால், நாமும் அழிந்து விடுவோம். மக்கள் மீது நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும். இதனால் துணிந்து முடிவு எடுத்துள்ளோம்.

அதில் பின்வாங்க மாட்டோம் என்று உறுதியான முடிவை அவர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து விட்டார். இந்த தகவலை பாஜக மேலிடத்தில் நீங்களே கூறிவிடுங்கள் என்றும் கூறிவிட்டார். இந்த தகவல் பாஜக மேலிடத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாஜக மாலை 6 மணி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு வரும்படி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அவரும் விரைந்துள்ளார். இதனால் டெல்லியில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக தற்போதுவரை கூட்டணிக்கு வராததால், புதிய அணி குறித்த அறிவிப்பை இன்று மாலை டெல்லி பாஜக எடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியோ, தனது அணிக்கு புதிய கட்சிகளை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்.

 

Related posts

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்