வெள்ள பேரிடரில் வேறொரு உயிரை காப்பாற்றிய மீனவர்கள் அனைவருமே கடவுள்கள்தான்: அமைச்சர் உதயநிதி பேச்சு

சென்னை: வெள்ள பேரிடரில் வேறொரு உயிரை காப்பாற்றிய மீனவர்கள் அனைவருமே கடவுள்கள்தான் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல், வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்ட 1,200 மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர்; புயல் – மழை – வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தாலும், மக்களை காக்க முதலில் களத்திற்கு வருபவர்கள் நம் மீனவ நண்பர்கள். சமீபத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தூத்துக்குடி – நெல்லை போன்ற தென் மாவட்டங்களிலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, உயிரைப் பணயம் வைத்து மீனவ நண்பர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டார்கள்.

தென் மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அரசு சார்பில் தூத்துக்குடியில் அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிலையில், மிக்ஜாம் புயலால், சென்னை – திருவள்ளூர் – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, படகுகளோடு களத்தில் இறங்கி மக்களை மீட்டதோடு – அரசின் நிவாரணப் பணிகளுக்கும் துணை நின்ற 1200 மீனவ மக்கள் – அப்பணிகளை ஒருங்கிணைத்த அரசு அலுவலர்களுக்கு, மீன்வளத்துறை சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் இன்று பங்கேற்றோம்.

நேர்மையும் – துணிச்சலும் – கேட்காமலேயே பிறருக்கு உதவி செய்கின்ற பண்பையும் கொண்டுள்ள நம் மீனவர்களுக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும். மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளில் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்ததற்கு மீனவர்களின் பங்கு மிக முக்கியம். வெள்ள பேரிடரில் வேறொரு உயிரை காப்பாற்றிய மீனவர்கள் அனைவருமே கடவுள்கள்தான்; இன்னொரு உயிரை காப்பாற்றுபவனே உண்மையான இறைவன் இவ்வாறு கூறினார்.

Related posts

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி