மதுரை: ‘நான் 25 வயது இளைஞனை போல இருக்கிறேன். 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன்’ என நடிகர் சரத்குமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில், கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் பேசியதாவது: இந்தியா இளைஞர்களின் அறிவை முடக்கி வைப்பதில் வெளிநாட்டு சதி உள்ளது. போதைப் பொருட்கள் பல்வேறு ரூபங்களில் இந்தியாவில் ஊடுருவி வருகிறது. ஏன் மது குடிக்கிறோம்? எதற்காக போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறோம் என்பதை இன்றைய கால இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இப்போது எனக்கு 69 வயதாகிறது. ஆனால், 25 வயது இளைஞனை போல இருக்கிறேன். 150 ஆண்டுகள் வரை, நான் உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். 2026ல் என்னை முதலமைச்சராக்கினால் அந்த வித்தையை எல்லோருக்கும் கற்றுத் தருவேன். திமுகவில் ராஜ்ய சபா உறுப்பினராக கலைஞர் எனக்கு பதவி கொடுத்தார். அதிமுக என் உழைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு கறிவேப்பிலையாக பயன்படுத்தி, தூக்கி எறிந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார். 150 ஆண்டுகள் வரை உயிருடன் இருப்பேன் என நடிகர் சரத்குமார் பேசியது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.