புதுடெல்லி: இஸ்லாமிய பெண்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 இன் கீழ் ஜீவனாம்சம் பெறலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீப தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்துல் சமத் என்பவர் அவரது மனைவிக்கு பராமரிப்பு தொகையினை வழங்க கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்ட தெலுங்கானா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது.
அதில், இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1986ன் மூலம் விவாகரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய பெண் தனது முன்னாள் கணவன்டம் இருந்து குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125ன் கீழ் ஜீவனாம்சம் பெறுவதை எந்த வகையிலும் தடுக்கவில்லை என தீர்ப்பளித்துள்ளது. அதேப்போன்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் விவாகரத்து செய்த மனைவிக்கு பராமரிப்பு தொகையினை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு தெரிவித்திருந்தது. இதையடுத்து உத்தரவுக்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது இஸ்லாமிய தனிச்சட்டத்தின் நடைமுறைகளுக்கு முழுவதும் எதிராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.