கோவை: பாசி நிறுவன இயக்குநரை கடத்தி ரூ.3 கோடி பறித்த வழக்கில் இருந்து ஐஜியை விடுவிக்க சிபிஐ கோர்ட் மறுத்துவிட்டது. திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி போரக்ஸ் டிரேடிங் நிதி நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கே முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இங்கு முதலீடு செய்தனர். ஆனால் இந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்த ரூ.930 கோடியை மோசடி செய்தது. இந்த நிறுவன இயக்குனர்களான மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடி தொடர்பாக அப்போது விசாரித்த போலீசார், பெண் இயக்குனர் கமலவள்ளியை கடத்திச்சென்று ரூ.3 கோடியை பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் போலீஸ் உயர் அதிகாரியை சந்தித்து வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அப்போதைய மேற்கு மண்டல போலீஸ் ஐஜி பிரமோத்குமார், டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் சண்முகையா, ஜான்பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள சிபிஐ கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தற்போது கரூர் காகித ஆலை நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஐஜி பிரமோத்குமார் ஆஜராகவில்லை. அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.
இதையடுத்து அவர் கடந்த மாதம் கோவையில் உள்ள சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார். விசாரணையை நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் பிரமோத்குமார் சிபிஐ கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘நிதி நிறுவன பெண் இயக்குனரை மிரட்டி பணம் பறித்த வழக்கிற்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று சிபிஐ கோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜன் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கோவிந்தராஜன் வழக்கை விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தார். வரும் 28ம் தேதி பிரமோத்குமார் உட்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார்.