திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 10ம் கட்ட அகழாய்வை கடந்த 18ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கீழடியில் ஜவஹர், பிரபாகரன், கார்த்திக் ஆகியோரது ஒன்றரை ஏக்கர் நிலங்களில் 12 குழிகள் தோண்டப்பட்டு 10ம் கட்ட அகழாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த ஐந்து நாட்களில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்தன. ஒன்றரை அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ள நிலையில், பாசி மணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 28 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக தொல்லியல் துறை கமிஷனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். கீழடியில் தொல்லியல் துறை இயக்குநர் ரமேஷ், இணை இயக்குநர் அஜய் உள்ளிட்டோர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொல்லியல் துறை மாணவ, மாணவிகள் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.