காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமியிக்கு அதே பகுதியை சேர்ந்த சூர்யா (21) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். கடந்த 1ம் தேதி இரவு அந்த சிறுமியை சூர்யா அழைத்து சென்றார். பின்னர் 2 நாட்கள் கழித்து மயக்கமான நிலையில் சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பெற்றோர் விசாரித்தபோது, ‘சூர்யா மற்றும் அவரது நண்பர் நிஷாந்த் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிலர் மது கொடுத்து போதையில் பலாத்காரம் செய்தனர்,’ என்று சிறுமி தெரிவித்து உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூர்யா, நிஷாந்த், கவிராஜ், ராஜ்குமார், பாலமுருகன், செல்லபாண்டி, வினோத்குமார், வேலு ஆகிய 8 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், ‘கைதான 8 பேரும் சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று மதுவில் போதை பொருட்களை கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் மயக்கமான நிலையில் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் சிறுமி சுமார் 34 மணி நேரம் மயக்கமான நிலையில் இருந்துள்ளார்,’ என்று தெரியவந்துள்ளது. இதில், மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.