சென்னை : விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் அதிமுக உள்ளிட்ட மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள் அன்று விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது. அரசியலமைப்பு படி தேசிய அளவில் மது மற்றும் போதை ஒழிப்பதற்காக சட்டம் இயற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்னிறுத்தி இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக முழு மதுவிலக்கு கொள்கைக்கான செயல்திட்டத்தை வரையறுக்க வேண்டும்.
இதே போன்ற கோரிக்கை முன்னிறுத்தி இந்த மாநாடு நடைபெற உள்ளது. மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அதிமுகவும் தயங்குகிறது. வேண்டுமானால் அவர்கள் மாநாட்டுக்கு வரட்டும். எந்தக் கட்சியும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது. இதை தேர்தலோடு பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை. விசிகவின் தேர்தல் அரசியல், நிலைப்பாடு முற்றிலும் வேறானது. மக்களின் பிரச்சினைக்காக மதவாத, சாதியவாத சக்திகளை தவிர அனைவரோடும் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.