திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் பல்வேறு பகுதிகளில் வாத்துகள், கோழிகள் உள்பட பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து 60 ஆயிரம் பறவைகளைக் கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கணூர், சேர்த்தலா, தண்ணீர்முக்கம், தைக்காட்டுசேரி, சேன்னம்பள்ளிப்புரம், வயலார், மாராரிக்குளம் புலியூர் உள்பட பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் வாத்துகள், கோழிகள் உள்பட பறவைகள் திடீர் திடீரென செத்து விழுந்தன.
இதையடுத்து அந்தப் பறவைகளின் ரத்த மாதிரி பூனாவுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் 60 ஆயிரம் பறவைகளை இன்று முதல் கொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு சில மாதங்களில் கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.