புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டிச.21ம் தேதி நேரில் ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா, ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதற்காக கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. ஆனால் உரிய முறையில் இல்லாமல், தெளிவற்ற முறையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக கெஜ்ரிவால் மறுத்து விட்டார்.
தற்போது விபாசனா தியானப்பயிற்சிக்காக அவர் இன்று முதல் 10 நாட்கள் செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில் டிச.21ம் தேதி நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை விசாரணை தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டெல்லி அரசியலில் மீண்டும் பரரப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பு கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது.