சென்னை: காற்று மாசுவை கட்டுப்படுத்த பசுமை பூங்காக்களுக்காக எம்எல்ஏக்களுக்கு தலா 1000 நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பாபநாசம் எச்.எம்.ஜவாஹிருல்லா (மமக) கேட்ட கேள்விகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அளித்த பதில் வருமாறு: மணலி, எண்ணூர் பகுதிகளில் காற்றுத் தரத்தை கட்டுப்படுத்துகின்ற வகையில் 17 தொழிற்சாலைகள் 5 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஹெக்டேர் பரப்பளவில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவிருக்கின்றன. செங்கல்பட்டு, கடம்பூரில் 300 கோடி ரூபாயில் தாவரவியல் பூங்கா, திருச்சி, மதுரை ஆகிய இரண்டு இடங்களிலே, ஏற்கெனவே திருச்சியில் ஒரு கோடி மரங்கள் நடவு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பசுமை பூங்காக்களுக்காக ஆயிரம் நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்படும். பேரவைத் தலைவருக்கும் ஆயிரம் மரங்கள் வழங்கப்படும். எந்தச சட்டமன்ற உறுப்பினர் கேட்கிறீர்களோ எல்லோருக்கும் ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.