Tuesday, October 1, 2024
Home » மெரினா கடற்கரையில் விமான படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி; சென்னையில் இன்று முதல் 8ம்தேதி வரை 25 விமான நேரங்கள் மாற்றியமைப்பு

மெரினா கடற்கரையில் விமான படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி; சென்னையில் இன்று முதல் 8ம்தேதி வரை 25 விமான நேரங்கள் மாற்றியமைப்பு

by Francis

மீனம்பாக்க: சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம்தேதி நடக்கயிருக்கும் ஏர்ஷோ நிகழ்ச்சிக்காக, ஒத்திகை நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நடப்பதால், இன்று முதல் 8ம்தேதி வரை பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 மணி வரை ஒன்றரை மணி நேரம் சென்னையில் இருந்து புறப்படும் 15 விமானங்கள், சென்னையில் தரை இறங்கும் 10 விமானங்கள் என 25 விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை தினத்தையொட்டி அக்.6ம்தேதி காலை 11 மணியிலிருந்து பகல் ஒரு மணி வரை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை விமானங்களின் வீர சாகசம் மற்றும் ஏர்ஷோ நிகழ்ச்சிகள் பொதுமக்கள் பார்வைக்காக நடத்தப்பட உள்ளது. இதுபோல் தாம்பரம் விமானப் படைத் தளத்திலும் வீர சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி மெரினா கடற்கரை மற்றும் தாம்பரத்தில் இன்று முதல் வரும் 8ம்தேதி வரை நடக்கிறது.

இந்த நேரத்தில் சென்னை விமானநிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறங்குவது, விமானப்படை சாகசங்கள் செய்யும் விமானங்களுக்கு இடையூறாக இருக்கும் என கருதப்படுவதால், சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் வரும் 8ம்தேதி வரை 15 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை விமான சேவை நிறுத்தப்பட்டு, சென்னை விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்படுகிறது. முதல் நாளான இன்று பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவை நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை விமானநிலையத்தில் இருந்து பகல் 1.45 மணியிலிருந்து மாலை 3.15 மணி வரை 15 விமானங்கள் புறப்படுகிறது. இதில் சிங்கப்பூர், டாக்கா, யாழ்ப்பாணம் ஆகிய 3 சர்வதேச விமானங்களும், 12 உள்நாட்டு விமானங்களும் அடங்கும். இந்த விமானங்கள் அனைத்தும் இன்று மாலை 3.20 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் விதத்தில் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பகல் 1.55 மணிக்கு சென்னையில் இருந்து கோவா புறப்பட்டு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மாலை 3.20 மணிக்கும், பகல் 2.15 மணிக்கு சென்னை டெல்லி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மாலை 3.35 மணிக்கும், சென்னை-சிங்கப்பூர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பிற்பகல் 2.25 மணிக்கு பதிலாக மாலை 3.20 மணிக்கும், சென்னை-தூத்துக்குடி விமானம், பிற்பகல் 2.20 மணிக்கு பதிலாக மாலை 3.30 மணிக்கும், சென்னை-கோவை விமானம் பிற்பகல் 2.25 மணிக்கு பதிலாக மாலை 3.20 மணிக்கும், சென்னை-ராஜமுந்திரி விமானம் பிற்பகல் 2.25 மணிக்கு பதிலாக, மாலை 3.25 மணிக்கும், சென்னை-சீரடி பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக மாலை 3.30 மணிக்கும், சென்னை-கொல்கத்தா விமானம் மாலை 3 மணிக்கு பதிலாக மாலை 3.35 மணிக்கும், சென்னை-மும்பை விமானம் மாலை 3 மணிக்கு பதிலாக மாலை 3.15 மணிக்கும், சென்னை புனே விமானம் மாலை 3 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கும் மற்றும் யாழ்ப்பாணம், டாக்கா, மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட விமானங்களின் புறப்பாடு நேரங்களும் மாலை 3.30 மணிக்கு மேல் புறப்படுவதுபோல் மாற்றப்படுகிறது.

இதுபோல் இன்று பகல் 1.45 மணியிலிருந்து மாலை 3.15 மணி வரை சென்னைக்கு வந்து தரையிறங்கும் விமானங்களான யாழ்ப்பாணம், கொழும்பு, அபுதாபி, டாக்கா, சீரடி, மதுரை, டெல்லி உள்ளிட்ட 10 விமானங்களின் நேரங்கள் மாலை 3.15 மணிக்கு மேல் சென்னையில் வந்து தரை இறங்குவதுபோல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 மணி வரை ஒன்றரை மணி நேரத்தில் புறப்பாடு விமானங்கள் 15, வருகை விமானங்கள் 10 என 25 விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நேர மாற்றம் குறித்து உறுதி செய்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளும்படி இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

 

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi