Tuesday, July 2, 2024
Home » உடல்நிலை சரியில்லாத பெண்ணை ஏமாற்றி ரூ.10 கோடி வீட்டை அபகரித்த பில்டர் கூட்டாளியுடன் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

உடல்நிலை சரியில்லாத பெண்ணை ஏமாற்றி ரூ.10 கோடி வீட்டை அபகரித்த பில்டர் கூட்டாளியுடன் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

by Dhanush Kumar

சென்னை: உடல் நிலை சரியில்லாத பெண்ணை ஏமாற்றி ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்துடன் கூடிய வீட்டை ஏமாற்றிய பில்டர் மற்றும் அவரது கூட்டாளியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது ெசய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், சென்னையில் வசித்து வரும் தனது தாய் மாமாவின் மகள் பிரேமா என்பவருக்கு சொந்தமாக 5,300 சதுரடி நிலம் உள்ளது. அதில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு உடல் நிலை சரியில்லாததால், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தனியாக வசித்து வரும் பிரேமாவுக்கு சில உதவிகளை செய்து வந்துள்ளார்.

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ராஜேந்திரன், ரூ.10 கோடி மதிப்புள்ள இடத்துடன் கூடிய வீட்டை வாங்குவதாக கூறி, ரூ.3.20 கோடிக்கு தனது நண்பரான லட்சுமி பில்டர்ஸ் உரிமையாளர் இளங்கோ உடன் இணைந்து பிரேமாவுக்கு தனியாக வங்கி கணக்கு தொடங்கி அதில் நிலத்திற்கான முன்பணம் சில லட்சங்கள் காசோலைகள் மட்டும் கொடுத்துள்ளனர். பிறகு அந்த பிரேமாவின் வங்கி கணக்கில் போடப்பட்ட பணத்தையும் இருவரும் அவருக்கு தெரியாமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்களிடம் இருந்து நிலம் மற்றும் வீட்டை மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பிரேமாவின் தாய் லலிதாம்பாள் என்பவர் கடந்த 1952ம் ஆண்டு விலைக்கு வாங்கி அதில் வீட்டு கட்டி வசித்து வந்துள்ளனர். லலிதாம்பாள் மற்றும் அவரது கணவர் சூரியநாராயணன் ஆகியோர் இறப்புக்கு பிறகு அந்த வீட்டில் பிரேமா கடந்த 2004ம் ஆண்டு முதல் தனியாக வசித்து வந்தது தெரியவந்தது. உடல் நலம் சரியில்லாத பிரேமாவை ஏமாற்றி ராஜேந்திரன் (48) மற்றும் லட்சுமி பில்டர்ஸ் உரிமையாளர் இளங்கோ (56) ஆகியோர் ரூ.10 கோடி மதிப்புள்ள இடத்தை ரூ.3.20 கோடிக்கு பிரேமாவிடம் இடத்தை கிரையம் பெற்று அதற்காக கொடுக்கப்பட்ட பணத்தையும், அவருக்கு தெரியாமல் ஏமாற்றியது விசாரணையில் உறுதியானது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ராஜேந்திரன், லட்சுமி பில்டர்ஸ் உரிமையாளர் இளங்கோ ஆகியோர் மீது ஐபிசி 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நிலத்திற்கான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

You may also like

Leave a Comment

3 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi