சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக காங்கிரஸ் அரசு பட்ஜெட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டி, குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஒரு தனி திட்டப் பிரிவு மற்றும் இரண்டு உட்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன, இத்திட்டத்தின் கீழ், வனப் பகுதியில் நீரில் மூழ்கும் நிலத்தை அடையாளம் காணும் பணியும், மரங்களை எண்ணும் பணியும் ஏற்கெனவே துவங்கப்பட்டுள்ளது என்றும், உரிய அதிகாரிகளிடம் இருந்து தேவையான அனுமதிகளை பெற்று பணிகளை விரைந்து துவங்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது, உச்சநீதிமன்ற தீர்ப்பினை வெளிப்படையாகவே மீறுவது நீதிமன்ற அவமதிப்பு. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிடாவிட்டால், தமிழகத்திற்கு துரோகத்தை செய்யத் துணியும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஒன்றிய, மாநில அரசையும் கண்டித்து, அதிமுக விவசாயிகளை திரட்டி அறப் போராட்டத்தை முன்னெடுக்கும்.