சென்னை: மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் வகையில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் மீது போடப்பட்ட 5000க்கும் மேற்பட்ட வழக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ரத்து செய்ததில், என் மீதான 25க்கும் மேற்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது. இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2009ம் ஆண்டு ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்று இங்கிலாந்து தூதரகத்தை முற்றுகையிட்டதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைத்த போராட்டங்களில் பங்கேற்றதில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலாஜி மூலமாக முறையிட்டு ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே சிங்கள ராணுவத்திற்கு தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி அளிக்க கூடாது என்று எனது தலைமையில் நடந்த போராட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.