Sunday, September 8, 2024
Home » அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் விவகாரம் எடப்பாடி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் விவகாரம் எடப்பாடி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

by Karthik Yash

சென்னை: அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடைகோரிய எடப்பாடி பழனிசாமி வழக்கை தள்ளிவைக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது. அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய தாமதப்படுத்தியதால், அதிமுக பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்ததுடன், தடையை நீக்கக் கோரி தனி நீதிபதியிடம் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் கவுதம் ஆஜராகி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த அவரது மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்றத்திலும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த அவரது மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ஆராய்ந்த பிறகு, இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்க வேண்டி உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார். இதனையேற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like

Leave a Comment

four × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi